'ஆப்' வெற்றி ஒரு அரசியல் பூகம்பம், மோடிக்கு கிடைத்த அடி: சர்வதேச ஊடகங்கள்
வாஷிங்டன்: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதை அரசியல் பூகம்பம் என்று சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 66 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு வெறும் 3 இடங்கள் தான் கிடைத்துள்ளது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. டெல்லியில் மோடி அலையை ஆம் ஆத்மி கட்சியின் சுனாமி மூழ்கடித்துவிட்டது.
இந்நிலையில் டெல்லி தேர்தல் முடிவு பற்றி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயார்க் டைம்ஸ்
நரேந்திரர மோடி அமோக வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் ஆகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் டெல்லியில் சிறிய அளவிலான அரசியல் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒருவரின் தலைமையிலான சிறிய அரசியல் கட்சி மோடியின் ஆளுங்கட்சியை தோற்கடித்துள்ளது என்று நியூயார்க் டைம்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்என்
இந்த வாரம் டெல்லி புதிய அறிவியல் பற்றி பேசும். அது தான் இயற்பியல். மேலே சென்றது கீழே வரத் தான் ஆக வேண்டும். டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க செய்தி தொலைக்காட்சியான சிஎன்என் தெரிவித்துள்ளது.
பிபிசி
கடந்த ஆண்டு பிரதமர் ஆனதில் இருந்து மிகவும் பிரபலமாக இருந்த மோடிக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி ஆகும். உள்ளூர் தேர்தல்களில் வெற்றி, சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களை கவர்ந்ததில் வெற்றி என்று இருந்த மோடிக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி இது என்று பிபிசி தெரிவித்துள்ளது.
கார்டியன்
டெல்லி தேர்தல் முடிவுகள் மோடிக்கு கிடைத்த அடி என்று இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டியன் நாளிதழ் தெரிவித்துள்ளது.