ஐபிஎல் பட்ஜெட்டை குறைத்த வினோத் ராய் குழு... தொடக்க விழாவில் மாற்றம்!
ஐபிஎல் சீசன் 11க்கான தொடக்க விழாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி : ஐபிஎல் 2018 தொடக்கவிழா ஏப்ரல் 6ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 7ம் தேதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் நியமித்த நிர்வாகிகள் குழு தொடக்க விழாவிற்கான பட்ஜெட்டில் ரூ. 20 கோடி குறைத்ததே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளின் உற்சாகம் ஆடம்பரம் அத்தனையும் தெறிக்கும் விஷயங்களாக இருப்பவை தொடக்க விழாவிற்கான நிகழ்ச்சிகளே. கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரைப்பிரபலங்கள் என்று டி20 போட்டிகளின் தொடக்க விழாவே கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முந்தைய நாள் மிகப் பிரம்மாண்டமாக ஐபிஎல் சீசன் துவக்க விழா நிகழ்ச்சிகள் ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள், வானவேடிக்கைகளுடன் தொடங்கும். இந்த ஆண்டும் ஐபிஎல் சீசன் 11க்காக இதே போன்றதொரு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பட்ஜெட்டை குறைத்த நிர்வாகிகள் குழு
ஏப்ரல் 6ம் தேதி கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகிகள் குழு துவக்க விழாவிற்கான பட்ஜெட்டை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 30 கோடியாக குறைத்துள்ளதாக தெரிகிறது.
ஏப்ரல் 7ல் தொடக்க விழா
இதனால் துவக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல் ஏப்ரல் 7ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்திலேயே நடத்திக்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்
சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டு தடைக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கின்றன. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குவது அந்த அணியின் ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்துள்ளது.
9 இடங்களில், 51 நாட்கள்
இதனையடுத்து இரண்டாவது போட்டி டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. உலகம் முழுவதும் பிரபலமான ஐபிஎல் சீசன் 11, 9 இடங்களில் 51 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.