ஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்
பாக்தாத்: ஈராக்கில் அஷுரா விழா எனப்படும் இஸ்லாமிய விழா ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகி உள்ளனர்.
ஈராக்கில் கர்பாலா பகுதியில் எல்லா வருடமும் அஷுரா விழா கொண்டாடப்படுவது வழக்கம். முகமது நபியின் பேரன் முகமது ஹுசைன் மரணத்தை இந்த விழாவில் நினைவு கூறுவார்கள். இவரின் மரணம்தான் இசுலாமியர்களின் சன்னி, ஷியா பிரிவின் பிளவிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த அஷுரா விழாவில் ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் வேகமாக ஓடுவார்கள். இதை ''துவாய்ரிஜ் ஓட்டம்'' என்று அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடந்த போரில் முகமது ஹுசைன் மரணம் அடைந்தார். இதை நினைவு கூறுவதற்காக இந்த ஓட்டம் இப்போது கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுக்க ஷியா பிரிவை சேர்ந்த மக்கள் பலர் இந்த நிகழ்வில் எப்போதும் கலந்து கொள்வார்கள். இதில் ஹுசைன் மசூதியை நோக்கி மக்கள் எல்லோரும் கூட்டமாக ஓடுவார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் இதில் ஓடுவார்கள் . இவர்கள் சிலர் குதிரைகளில் துரத்திக் கொண்டு வருவதும் சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படும்.
இந்த நிலையில் இன்று நடந்த அஷுரா விழாவில் 31 பேர் நெரிசலில் சிக்கி பலியானார்கள். ஓடும் போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி, குதிரை ஏறி மிதித்து 31 பேர் பலியானார்கள்.
மொத்தம் 200 பேர் காயம் காரணமாக இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் 2004ல் இந்த அஷுரா விழாவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 140 பேர் பலியானார்கள். அதேபோல் பாக்தாத்தில் இதேபோல் கடந்த வருடம் நடந்த விழாவில் நெரிசலில் சிக்கி 965 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.