ஏமனுக்குள் தரைப்படையை அனுப்பும் செளதி... ஏமன் அதிபர் செளதியில் தஞ்சம்
சனா: ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, அந்நாட்டு அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதி ஏமனை விட்டு வெளியேறி ரியாத் சென்று விட்டார். இந்த நிலையில், சவுதி அரேபியாவின் தரைப்படை ஏமனில் தனது தாக்குதலைத் தொடங்க உள்ளது.
அரேபிய நாடுகளிலேயே மிகவும் ஏழை நாடான ஏமனில், தற்போது உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. ஹவுதி எனப்படும் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள், ஏமன் அரசிற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவாக உள்ளது.
ஏமன் நாட்டு அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதி கேட்டுக் கொண்டதிற்கிணங்க, சவுதி அரேபியா நேற்று முன்தினம் முதல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தனது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கென 100 போர் விமானங்கள், 1.5 லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்கள் மற்றும் விமானப்படையை சவுதி அரேபியா ஏமனுக்கு அனுப்பி உள்ளதாக அல் அரேபியா செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, மொராக்கோ, ஜோர்டான், சூடான், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட 8 அரபு நாடுகள் சவுதி தலைமையில் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் பாகிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளும் இந்த தாக்குதலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளன. ஆனால், சவுதி அரேபியாவின் தாக்குதலுக்கு ஈரான் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சம்மதம் :
ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அரபு நாட்டு படைகளுக்கு ஆயுத வினியோகம் மற்றும் உளவுத்துறை உதவிகளை செய்ய அமெரிக்காவும் முன் வந்துள்ளது. இதனால் ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மிகப்பெரும் தாக்குதல் நடைபெற வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
சீனா கவலை :
இந்நிலையில், ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் கவலையளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் கூறுகையில், ‘ஏமன் விவகாரத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி அனைத்து நாடுகளும் செயலாற்ற வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பலி :
கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபிய படைக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடும் சண்டைகளுக்குப் பின்னர் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த ஏடன் விமான நிலையத்தை ஏமன் படையினர் மீட்டுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு :
எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் லாரிகள் ஏடன் வழியாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஏமனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் தீவிரமடைந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. சவுதி அரேபியா ஏமனில் தாக்குதலைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சுமா 6 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது.
சவுதியில் அடைக்கலம் :
இதற்கிடையே, கிளர்ச்சியாளர்கள் ஏமன் அதிபர் மாளிகையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறிய அந்நாட்டு அதிபர், தற்போது சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது அவர் ரியாத்தில் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.