சீனாவோடு செய்த டீல்.. இந்தியாவின் சாபஹார் ரயில்வே திட்டத்தை ரத்து செய்த ஈரான்.. பரபரப்பு முடிவு!
டெஹ்ரான்: ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
ஈரான் - இந்தியா இடையே கடந்த வருடத்தில் பல்வேறு விஷயங்களில் பிரச்சனை நிலவி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இந்தியா செவி சாய்த்தது, ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று இந்தியா முடிவு செய்தது என்று பல விஷயங்கள் ஈரானை கோபப்படுத்தியது. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் ஆனது ஈரானை காயப்படுத்தியது.
இந்த நிலையில் ஈரானில் இந்தியா அமைக்க இருந்த ரயில்வே திட்டத்தை ஈரான் மொத்தமாக நீக்க முடிவு செய்துள்ளது. 4 வருடங்களுக்கு முன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நீக்குவதாக ஈரான் முடிவு செய்துள்ளது.
மொத்தமாக நிராகரிக்கிறோம்.. சீனாவிற்கு அமெரிக்கா போட்ட "கேட்".. தென்சீன கடலில் எதிர்பாராத திருப்பம்!
என்ன திட்டம்
ஈரானில் இருக்கும் சாபஹார் துறைமுகம் அந்நாட்டின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாகும். ஈரானின் இந்த துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் உடன் ஈரானை ரயில் மூலமாக இணைக்க இந்த திட்டம் வழியாக அமையும் என்று கூறப்பட்டது.
மூன்று நாடுகள்
இந்த ரயில்வே திட்டம் மூன்று நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்திய ரயில்வே, ஈரானியன் ரயில்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும். ஈரான் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள பகுதியில் வர்த்தக பயணத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த 2016ல் பிரதமர் மோடி சார்பாக ஈரானில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
தொடங்கவில்லை
இந்த பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் அதிபர் காணி மற்றும் ஈரான் அதிபர் ரவுஹானி இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த திட்டத்திற்காக 1.6 பில்லியன் டாலர் செலவு செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. இதற்காக இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ரயில்வே எஞ்ஜினியர்கள் அனுப்பப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ரயில்வே திட்டத்தை இந்தியா தொடக்காமலே இருந்தது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பயந்து இந்தியா இந்த பணியை தொடங்காமல் இருந்தது.
எதிர்ப்பு இல்லை
சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக இந்த திட்டத்தை இந்தியா தொடக்காமல் இருந்தது. இந்த நிலையில்தான் ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இந்தியா பணிகள் எதையும் செய்யவில்லை என்று கூறி ஈரான் கூறி இந்த முடிவை எடுத்துள்ளது.
ஈரான் கோபம்
தாங்களே இந்த திட்டத்தை நிறைவேற்றிக்கொள்கிறோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 628 கிமீ தூரத்திற்கு இந்த ரயில்வே பாதையை ஈரான் அமைக்க உள்ளது. இதற்கான திட்டத்தை அந்நாட்டு அரசு துவங்கி வைத்துள்ளது . 2022 மார்ச் மாதத்திற்குள் இதை நிறைவேற்ற ஈரான் முடிவு செய்துள்ளது.இதற்காக ஈரான் 400 மில்லியன் டாலர் செலவு செய்ய முடிவு செய்துள்ளது.
சீனா காரணம்
இந்தியாவுடன் திடீரென ஈரான் இப்படி மோதலை கடைபிடிக்க சீனாவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சீனாவுடன் ஈரான் 400 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை செய்து இருக்கும் நிலையில், தற்போது ஈரான் இந்தியாவிற்கு எதிராக முடிவு செய்துள்ளது. 25 வருட இரண்டு நாட்டு ஒப்பந்தத்தை ஈரான் - சீனா கையெழுத்திட்டுள்ளது.
என்ன ஒப்பந்தம்
அதன்படி சீனா இந்த திட்டம் மூலம் ஈரானில் பல்வேறு சாலை பணிகள், ரயில்வே பணிகள், மற்றும் துறைமுக பணிகளை செய்ய உள்ளது. சாபஹார் துறைமுக பணிகளையும் இந்த திட்டம் மூலம் சீனா செய்ய இருக்கிறது. அங்கே எண்ணெய் எடுக்கும் பணிகளையும் சீனா செய்ய உள்ளது. 25 வருடங்களுக்கு இந்த பணிகளை செய்ய சீனா ஈரானில் செய்ய இருக்கிறது.
உறவு முறியும்
சீனாவின் இந்த திட்டத்தில் விரைவில் பாகிஸ்தான் உள்ளே வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதாவது இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் இடையே ஒப்பந்தத்தை அப்படியே ஈரான் - சீனா - பாகிஸ்தான் என்று மாற்ற சீனா முயன்று வருகிறது. இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சர்வதேச மூவாக இது பார்க்கப்படுகிறது. ஈரானின் இந்த முடிவிற்கு இந்தியா எப்படி எதிர்வினையாற்றும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. சீனா காரணமாக இந்தியா - ஈரானின் உறவு முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.