கொலைக் குற்றம் சாட்டி.. மல்யுத்த வீரருக்கு மரணதண்டனை.. ஈரானில் ஷாக்!
டெஹரான்: 2018ம் ஆண்டு அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது ஒருவரைக் கொலை செய்து விட்டதாக கூறி மல்யுத்த வீரர் நவீத் அப்காரி என்பவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரண தண்டனைக்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், ஆம்னஸ்டி அமைப்பு உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.
27 வயதாகும் அப்காரிக்கு ஷிராஸ் என்ற நகரில் உள்ள சிறையில் வைத்து நேற்று தண்டனையை நிறைவேற்றியுள்ளது ஈரான் அரசு. இதை மாகாண அரசு வழக்கறிஞர் காசிம் மெளசவி உறுதிப்படுத்தியுள்ளார்.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி குடிநீர் வாரிய ஊழியர் ஹுசேன் டோர்க்மேன் என்பவரைக் கொலை செய்ததாக அப்காரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தான் நேற்று நிறைவேற்றியுள்ளனர்.
2018ம் ஆண்டு ஈரான் அரசுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடந்தன. ஷிராஸ் நகரிலும் கூட பெருமளவில் போராட்டங்கள் நடந்து வந்தன. அதில் அப்காரியும் பங்கேற்று அரசுக்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். தொடர்ந்தும் அவர் அரசுக்கு எதிராக பேசி வந்தார். இந்த நிலையில்தான் அவர் மீது கொலை வழக்குப் பாய்ந்தது.
அன்று இரவு நடந்த சம்பவம்.. 1 மாதமாக கட்சிதமான பிளான் போட்ட இந்தியா.. சீனாவிற்கு ஷாக் தந்தது எப்படி?
அப்காரிக்கு தண்டனை கொடுக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மிகத் தவறானது, அதிர்ச்சி தரும் செயலாகும் என்றும் அது கூறியுள்ளது. அதேபோல லண்டனைச் சேர்ந்த ஆம்னஸ்டி அமைப்பும் இந்த மரண தண்டனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அப்காரியுடன் சேர்த்து அவரது சகோதரர்கள் வஹித் மற்றும் ஹபீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்காரியின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் முன்பு வலியுறுத்தியிருந்தார். ஆனால் ஈரான் அரசு அனைத்துக் கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டது.
ஆம்னஸ்டி வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, உலக அளவில் சீனாவில்தான் அதிக அளவிலான மரணதண்டனை கடந்த ஆண்டு நிறைவற்றப்பட்டது. அதற்கு அடுத்த இடத்தில் ஈரான் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.