50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் ஷாக்!
ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்: ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். பல நாடுகளை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஈரான் அமெரிக்க இடையில் நடந்து வரும் சண்டை இப்போதைக்கு சரியாவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விதிகளை விதித்து வருகிறார்.
அதேபோல் ஈரான் மீது 3 க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் ஈரான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட தொடங்கியுள்ளது.
எண்ணெய் வர்த்தகம்
ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயை மட்டும் நம்பி இருக்கும் ஈரானின் பொருளாதாரம் பெரிய அடியை சந்தித்துள்ளது.
திணறல்
ஈரான் ஒரு பக்கம் கஷ்டப்பட்டாலும் மற்ற உலக நாடுகளும் இதனால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறது. ஆம், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க முடியாததால், கச்சா எண்ணெய் விற்கும் சவுதி போன்ற நாடுகளிடம் டிமாண்ட் கூடி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
புதிய திருப்பம்
இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அதிபர் ஹசன் ரௌஹானி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதில் இருந்து விரைவில் கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இருக்கிறது
நாட்டின் தென் பகுதியில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருக்கும் மொத்த எண்ணெய் கிணறுகள் மூலம் 150 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் எடுக்க முடியும். தற்போது கூடுதலாக 50 பில்லியன் பேரல் கிடைக்க போகிறது. இது ஈரானில் இரண்டாவது பெரிய எண்ணெய் கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
மாறும்
இதனால் ஈரானின் மதிப்பு உலக அளவில் உயரும். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளை இந்த கண்டுபிடிப்பு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் ஈரானிடம் மீண்டும் எண்ணெய் வாங்க சில நாடுகள் முயற்சி செய்யும், தங்கள் முடிவை சீனா உள்ளிட்ட நாடுகள் மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.