ஈரான் அணுசக்தி விஞ்ஞானி படுகொலை.. குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் வெளியீடு
தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி திட்டத்தை வழிநடத்தியதாக கூறப்படும் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே அண்மையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நிகழ்த்தியவர்களை ஈரான் அடையாளம் கண்டுள்ளது. அத்துடன் கொலையில் ஈடுபட்டவர்கள் இவர்கள் தான் என நான்கு பேரின் புகைப்படங்களையும் ஈரான் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் துணை ராணுவ அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) இல் பிரிகேடியர் ஜெனரலாக இருந்த அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே, இவர் தான் ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. ஆனால் இதனை ஈரான் ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வந்தது.
இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்கு புறநகரான 60 மைல் கிழக்கே அமைந்துள்ள அப்சார்ட் என்ற ஊரின் வழியாக மொஹ்சென் ஃபக்ரிசாதே, அவரது மனைவி ஆகியோர் காரில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது மரங்களை ஏற்றி வந்த ஒரு லாரி அந்தக் கார்அருகே வந்தது. அப்போது, அந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடிக்க வைக்கப்பட்டது.
இஸ்ரேல் காரணம்
இதனால் மொஹ்சென் ஃபக்ரிசாதே சென்ற கார் நின்றுபோனது. அதனைத் தொடா்ந்து அந்தப் பகுதிக்கு வந்த சுமார் 5 போ், ஃபக்ரிசாதேவின் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஃபக்ரிசாதே மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டனர். 3 நிமிடத்தில் நடந்து முடிந்த படுகொலை சம்பவத்தால் ஈரான் கொதித்து எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.
ஈரான் நம்பிக்கை
இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவின் உதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் அதிகாரிகள் நம்புகின்றனர். இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஃபக்ரிசாதே படுகொலையில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
நான்கு பேர் படங்கள்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈரானிய நாட்டைச் சேர்ந்த மொஹமட் அஹ்வாஸ், பிரிட்டனை சேர்ந்த நான்கு நபர்களின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார், இவர்கள் தான் விஞ்ஞானி ஃபக்ரிசாதேவை படுகொலை செய்திருப்பதாகவும் ஈரானிய அதிகாரிகள் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
எங்கு உள்ளார்கள்
ஈரானில் உள்ள பல்வேறு ஹோட்டல் மற்றும் உணவகங்களில் நான்கு பேரின் புகைப்படங்களை ஈரானிய அதிகாரிகள் பரபரப்பாக விநியோகித்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து தகவல் கேட்கிறார்கள் என்றும் அஹ்வாஸ் கூறினார். அஹ்வாஸின் ட்வீட்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஈரானில் உள்ள அரசுக்கு சொந்தமான FARS செய்தி நிறுவனத்தின் அறிக்கை, நாட்டின் புலனாய்வு அமைச்சகம் படுகொலை செய்யப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த விவரங்கள் விரைவில் மக்களுக்கு வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.
கருத்து இல்லை
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று அஹ்வாஸ் தனது ட்விட்டரில் 60 க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் ஃபக்ரிசாதேவின் கொலையில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார். அவரது ட்வீட்டை ஏராளமான இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேலிய அரசு இதுவரை இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை.
பதிலடி தருவோம்
இதனிடையே தங்களது அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஈரான் அதிபா் ஹஸன் ரௌஹானி, அதற்கு தக்க பதிலடி தரப் போவதாக சூளுரைத்திருக்கிறார். இஸ்ரேல் அனுப்பிய கூலிப் படையினா்தான் விஞ்ஞானியை படுகொலை செய்துள்ளனா்.
இதற்கு தக்க பதிலடி தருவோம். எனினும், இந்த விவகாரத்தில் அவசரகதியில் முடிவெடுக்க மாட்டோம். ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதால் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களில் இருந்து பின்வாங்காது என்றார்.