ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட்
டெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா கொமேனிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் குவாசிம் சுலைமானி. ஈரானின் ராணுவ முகம் என சர்வதேச சமூகத்தால் குறிப்பிடப்படுவர் சுலைமானி.
கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை துரத்தும் பிரேசில்.. விழிபிதுங்கும் போல்சனோரோ அரசு
ஈரான் ராணுவ முகம்
ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் சுலைமானி. அதாவது ஈரானின் அதிகாரப்பூர்வமான ராணுவத்துக்கு இணையானது இந்த நிழல் ராணுவம். மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடும் இயக்கங்களுக்கு காட்பாதராக திகழ்ந்தவர் சுலைமானி என்பதால் அவரை பயங்கரவாதி என்றது அமெரிக்கா.
சுலைமானியை கொலை செய்த யு.எஸ்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுலைமானி ஜனவரி 3-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் சுலைமானி படுகொலையை அமெரிக்கா நியாயப்படுத்தியும் இருந்தது. இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே பெரும் மோதல் வெடித்தது. மத்திய கிழக்கில் அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
டிரம்ப்புக்கு பிடிவாரண்ட்
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களில் ஏராளமான அமெரிக்கா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இம்மோதல்களால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து கொரோனா நோய் தொற்று தாக்கம் பரவிய நிலையில் இந்த யுத்த அபாயம் தணிந்திருந்தது. இந்த நிலையில் தற்போது சுலைமானி படுகொலைக்கு காரணமான அமெரிக்கா அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்யும் பிடிவாரண்ட்டை பிறப்பித்திருக்கிறது ஈரான்.
இண்டர்போல் உதவி
அத்துடன் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ்- இண்டர்போல் உதவ வேண்டும் என்பதும் ஈரானின் வேண்டுகோள். டிரம்ப் உள்ளிட்ட 30 பேர் மீது படுகொலை, பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. இதனால் சர்வதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.