தூக்கில் தப்பிய கைதியை மீண்டும் தூக்கிலிடத் தேவையில்லை: ஈரான் அமைச்சர்
டெஹ்ரான்: தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டும், அதிசயமாக உயிர் பிழைத்த ஈரான் கைதியை மீண்டும் தூக்கில் போட வேண்டிய அவசியமில்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு நீதித்துறை அமைச்சர்.
கடந்த வாரம், ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக அலிரெசா என்ற கைதி தூக்கில் போடப்பட்டான். கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் தூக்கில் தொங்கப் விடப்பட்ட அவனது உடலை மருத்துவர்கள் பரிசோதித்து, அவனது மரணத்தை உறுதி செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது அவனது உடல்.
அலிரெசாவின் உடலை பெற்றுச் செல்வதற்காக அவனது உறவினர்கள் தயாராக காத்துக் கொண்டிருக்க, அலிரெசாவின் உடலில் அசைவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர் சவக்கிடங்கு ஊழியர்கள். அதனைத் தொடர்ந்து, அலிரெசாவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இன்னும் உயிரோடு இருப்பதை உறுதி செய்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீண்டும் அலிரெசாவை கைது செய்தனர். அலிரெசா பூரண குணமடைந்த பிறகு மீண்டும் அவன் தூக்கிலடப்படுவான் என அந்நாட்டு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு அலை உண்டானது.
தற்போது கோமா நிலையில் உள்ள அலிரெசாவை குணம்டைந்த பின்னர் மீண்டும் தூக்கிலிட்டால் ஈரான் குறித்து எதிர்மறையான எண்ணம் உலக நாடுகள் மத்தியில் உண்டாகும் என அந்நாட்டு வழக்கறிஞர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் முஸ்தபா போர்மொகமதி. அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘ஒருமுறை தூக்கிலிருந்து உயிர் தப்பிய மனிதனை மறுமுறை தூக்கில் போடுவது தேவையில்லை' என்றார்.
ஆயினும் இது குறித்த முடிவினை நீதித்துறையே எடுக்க இயலும். இது அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வராது என்பதால் நீதிபதிகளின் முடிவே இறுதியானதாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலக அளவில் ஈரானில் மரண தண்டனை விகிதங்கள் அதிகமாக உள்ளது. எனவே, இந்தக் குற்றவாளியின் மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்றுவது தடை செய்யப்பட வேண்டும் எனவும், மரண தண்டனைகளைத் தடை செய்யுமாறும் ஈரான் நாட்டைக் கேட்டுக் கொண்டுள்ளது சர்வதேச மன்னிப்பு சபை.