யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் துவங்கும் ஈரான்.. அதிபர் ஹசன் ரவ்ஹானி அதிரடி.. அமெரிக்கா டென்ஷன்
தெஹ்ரான்: ஈரானின் தெஹ்ரானுக்கு தெற்கே, நிலத்தடியில் மீண்டும் யுரேனியம் செறிவூட்டலை துவங்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஆய்வு தொடர்பாக, கடந்த 2015ல் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் விதமாக ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த அணுசக்தி ஒப்பந்தம் பைத்தியக்கரமானது என்று கூறி, அதிலிருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்துவரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மீண்டும் துவக்கம்
ஈரானில் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் துவங்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2015ல் கையெழுத்து
கடந்த 2015ம் ஆண்டில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிடையே ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இதன்படி அணுசக்தியை அணுஆயுதங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்த மாட்டோம் என்றும் ஆக்கப்பூர்வ பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் ஈரான் உறுதியளித்தது.
பொருளாதாரத் தடை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் இந்த அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்கரமானது என்று விமர்சித்த அவர், இந்த ஒப்பந்ததில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து, ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
ஒப்பந்தங்கள் மீறல்
ஈரான்மீது அமெரிக்கா தொடர்ந்து விதித்துவரும் பொருளாதாரத் தடைகளுக்கு அந்நாடு தொடர் கண்டனங்களை தெரிவித்து வந்தாலும், அவ்வப்போது அணு ஆயுத சோதனை ஒப்பந்தங்களை அந்நாடு மீறி வருகிறது.
அதிபர் அறிவிப்பு
இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே மீண்டும் யுரேனியம் செறிவூட்டலை துவங்க உள்ளதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி அறிவித்துள்ளார். உலக நாடுகள் இடையே, குறிப்பாக, அணுஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்து வரும் நாடுகள் இடையே இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹசன் ரவ்ஹானி
அமெரிக்கா தவிர்த்து ரஷ்யா உள்ளிட்ட மற்ற 5 நாடுகள், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்துவரும் நிலையில், அணு ஆயுதம் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலக முடியாது என்று ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சோதிக்கலாம்
அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தை மீறாமலே தற்போது நிலத்திற்கு அடியில் யுரேனியம் செறிவூட்டல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ள ஹசன், இதுகுறித்து ஐ.நா. ஈரானில் சோதனை மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.