ஈரானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,036- மலேசியாவில் 46 பேர் பலி!
டெஹ்ரான்: ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,036 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கொரோனாவால் இதுவரை 47, 503 பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனாவில் உயிரிழப்பு ஏற்பட்ட சீனாவை விட இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரையில் இத்தாலியில்தான் அதிகபட்சமாக 13,155 பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவில் 5,110 பேரும் ஸ்பெயினில் 9,387 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸில் 3,036 பேரும் இங்கிலாந்தில் 2,352 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர். ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் படு உக்கிரமாக உள்ளது.
ஈரானில் 3,036 பேர் பலி
கொரோனாவால் ஈரானில் மொத்தம் 47,593 பேர் பாதிக்கபட்டனர். இவர்களில் 15,473 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 3,036 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3871 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.
மலேசியாவில் 46 பேர் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் அதிகபட்சமாக 56 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்ததாக மலேசியாவில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் 27 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
சிங்கப்பூர், இலங்கை நிலவரம்
சிங்கப்பூரில் இதுவரை 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் 3 பேர் பலியாகி உள்ளனர். மாலத்தீவில் கொரோனா மரணங்கள் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. மியான்மரில் இதுவரை ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வங்கதேசத்தில் 6 பேரும் நேபாளில் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் 157 பேர் பலி
இந்தோனேசியாவில் கொரோனாவால் 157 பேர் பலியாகி இருக்கின்றனர். இங்கு 1,677 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தாய்லாந்து நாட்டில் 1,771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இங்கு 12 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸில் 2311 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்நாட்டில் 96 பேர் மரணித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை 23 பேர் மரணமடைந்துள்ளனர்.