நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. அதிரவைத்த ஈரான் சுகாதார அமைச்சர்!
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் உயிர்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஈரான் சுகாதார துறை துணை அமைச்சர் கொரோனா வைரஸ் தாக்குதால் பாதிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 80 ஆயிரம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சீனாவை தாண்டி பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
தென்கொரியா, வடகொரியா, சிங்கப்பூர் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகவேமாக பரவி வருகிறது. சீனர்களுடன் வர்த்தக ரீதியாக அதிக தொடர்பு உள்ள இந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
5 பேர் சாவு
குறிப்பாக தென்கொரியாவிலும், ஈரானில் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமையான இன்று ஒரே நாளில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள், ஒட்டுமொத்தமாக இதுவரை 5 பேர் ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்கள்.
சுகாதார அமைச்சர்
கொரோனா ரைவஸ் தாக்குதல் ஈரானின் கியூம் நகரில் இன்று 16 பேருக்கு இருப்பதாகவும், தெக்ரானில் 9 பேருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், மற்ற நகரங்களில் தலா 2 பேருக்கு என பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவை எல்லாவற்றையும் விட ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஹரிரிச்சிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று சோதனை
இந்த தகவலை நாட்டு மக்களிடம் துணை சுகாதார அமைச்சர் ஹரிர்ச்சியே தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் முகமூடி அணிந்தபடி பேசும் அவர், "நானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். நேற்றிரவு வரை எனக்கு காய்ச்சல் இருந்தது, நள்ளிரவில் எனக்கு நடத்தப்பட்ட வைரஸ் சோதனையில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதியானது.
வெற்றி பெறுவேன்
நான் ஒரு இடத்தில் இருந்து என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். சில நிமிடங்களுக்கு முன்பு, எனக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இறுதி சோதனையில் உறுதி செய்யப்பட்டதை மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இப்போது நான் மருந்துகளைத் எடுத்துக்கொள்ள தொடங்குகிறேன். நான் அதை உங்களுக்கு சொல்ல விரும்பினேன் ..அடுத்த சில வாரங்களில் இந்த வைரஸுக்கு எதிராக நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன்.
எச்சரிக்கை தேவை
இந்த கொரோனா "வைரஸ் யாருக்கும் பாகுபாடு காட்டாது. யாரை பாதித்துள்ள என்பது தெரியாது, ஒருவருக்கு ஒருவர் இது பரவும் என்பதால் ஈரானியர்கள் கவனமாக இருக்க வேண்டும்" இவ்வாறு அமைச்சர் ஹரிர்ச்சி எச்சரித்தார். இருமியபடி, காய்ச்சல் நிறைந்து காணப்பட்ட அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஈரான் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.