மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது
Recommended Video
தெஹ்ரான்: அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ), ஈரான் உள்ளிட்ட சில நாடுகளில், நடத்தியதாக கூறப்படும் ஒரு பெரிய இணைய உளவு நெட்வொர்க்கை, ஈரான் அரசு கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவை சேர்ந்த பல உளவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை ஓமன் வளைகுடாவில் உள்ள இரண்டு எண்ணெய் டேங்கர்களை, ஈரான் தாக்கியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா-ஈரான் நடுவே, பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று, ஈரான் மறுக்கிறது.
இந்த நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி திங்களன்று கூறுகையில் "பல்வேறு நாடுகளில் சிஐஏவின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த மிகவும் வலுவான, சிஐஏ இணைய உளவு வலையமைப்புகளில் ஒன்று ஈரானிய உளவு அமைப்புகளால், அண்மையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று பகீர் தகவலை தெரிவித்தார்.
சிஐஏ உளவாளிகளை, அடையாளம் காணவும் கைது செய்யவும் வழிவகுத்த எங்கள் நட்பு நாடுகளுடன், அமெரிக்காவின், நெட்வொர்க் பற்றிய தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம், என்று ஷம்கானி மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், எத்தனை சிஐஏ ஏஜென்ட்டுகள் கைது செய்யப்பட்டார்கள் மற்றும் எந்ததெந்த நாடுகளில் அவர்கள் சிக்கினார்கள் என்பதை, ஷம்கானி தெரிவிக்கவில்லை. இந்த வழக்கை பற்றி சில தகவல்களை அமெரிக்கா வெளியிட்டது. பொது விழிப்புணர்வுக்காக ஈரான் இப்போது அந்த தகவலை வெளியிட முடியும் என்றார் ஷம்கானி.
ட்ரம்ப், கடந்த ஆண்டு ஈரானுடனான சர்வதேச அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார். ஈரானின் பொருளாதாரம், சர்வதேச கச்சா எண்ணெய் விற்பனையில் உள்ளது. எனவே, அதன் பொருளாதரத்தை நசுக்கும் முயற்சிகளில், ட்ரம்ப் அரசு ஈடுபட்டு வருகிறது.
ஒரு கேரியர் ராணுவ குழு மற்றும் குண்டுவீச்சுக்கு தேவையான, வாகனங்களை மத்திய கிழக்கில் நிறுத்தியதுடன், 1,500 ராணுவ வீரர்களையும் அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் ஈரானில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.