நடனமாடிய இரான் பெண் கைது: தங்கள் நடன விடியோவை பகிர்ந்து ஆதரவு தெரிவிக்கும் பெண்கள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
நடனமாடி ஆதரவை வெளிப்படுத்திய இரான் பெண்கள்
இரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். மதே ஹோஜப்ரி என்ற அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அவர் அண்மையில் தனது சமூக ஊடக கணக்கில் இரான் மற்றும் மேற்கத்திய இசைக்கு நடனமாடும் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
https://www.instagram.com/maedeh_hozhabri/?utm_source=ig_embed
இவருக்கு ஆதரவாக ஏராளமான இரான் பெண்கள் #dancing_isn't_a_crime என்ற ஹாஷ்டாக்குடன் தாங்கள் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
https://twitter.com/HosseinRonaghi/status/1015610242045022209
https://twitter.com/dashmamush2014/status/1015927031828242432
"குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர்கள் சுதந்திரமாக திரியும் போது, பெண்கள் சந்தோஷமாக நடனமாடுவதற்காக கைது செய்யப்பட்டதை கண்டு இந்த உலகம் சிரிக்கும்" என்று அந்நாட்டு வலைப்பூ எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி கருத்து தெரிவித்து உள்ளார்.
மீண்டும் நாடு திரும்பும் சிரியா மக்கள்
கிளர்ச்சி குழுவுக்கும் சிரியா ராணுவத்திற்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து, அங்கிருந்து தப்பித்து ஜோர்டான் எல்லை வரை சென்ற சிரியா மக்கள், மீண்டும் வீடுகளுக்குத் திரும்பி வருவதாக ஐ.நா அலுவலகம் கூறி உள்ளது. இப்போது ஜோர்டான் எல்லையில் 150 முதல் 200 மக்கள் இருப்பதாக ஐ.நா மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்பாளர் அண்டெர்ஸ் பீட்டர்சன் கூறி உள்ளார். அண்மையில் கிளர்ச்சி குழுவுக்கும், ராணுவத்திற்கும் ஏற்பட்ட சுமுக உடன்படிக்கையை அடுத்து பலர் நாடு திரும்பி வருகின்றனர். சிரியா தென் மேற்கு எல்லையில் ராணுவத்திற்கும் கிளர்ச்சிக் குழுவுக்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து ஏறத்தாழ 3,20,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர் என்கிறது ஐ.நா.
- தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்
- அழியப்போகிறதா இந்த வாழைப்பழம்? - அதிர்ச்சி தரும் தகவல்
புதுப்பிக்கப்பட்ட ராஜாங்க உறவு
எரித்திரியாவும் எத்தியோப்பியாவும் பல ஆண்டுகால பகைமைக்குப்பின் மீண்டும் ராஜீய உறவை புதுப்பித்துள்ளன. எல்லை தொடர்பாக 1990 ஆம் ஆண்டு இரு ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் சண்டை ஏற்பட்டது. அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அமைதி ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. ஆனால், அதற்குப் பிறகும் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேற்றுமை நிலவிய சூழ்நிலையில் எத்தியோப்பியப் பிரதமர் அபை அஹமதும், எரித்ரிய அதிபர் இசாய் அஃபெர்க்கியும், எரித்ரிய தலைநகர் அஸ்மாராவில் சந்தித்து, ராஜீய உறவைப் புதுபித்துள்ளனர்.
ப்ரெக்ஸிட் செயலாளர் ராஜிநாமா
ப்ரெக்ஸிட் (ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை) செயலாளர் டேவிட் டேவிஸ் பிரிட்டன் அரசிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக 2016ல் ப்ரெக்ஸிட் செயலாளராக டேவிட் நியமிக்கப்ப்ட்டார். ப்ரெக்ஸிட் தொடர்பாக அண்மையில் தெரீசா மே எடுத்த சில முடிவுகளில் டேவிஸுக்கு உடன்பாடு இல்லாததால், இந்த முடிவினை அவர் எடுத்ததாகத் தெரிகிறது.
பெருமழை தொடரும்
ஜப்பானை வெள்ளக்காடாக மாற்றிய பெருமழை தொடரும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேற்கு ஜப்பானில் பெய்துவரும் பெருமழையினால் அந்தப் பகுதி எங்கும் நீர் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற பெருமழையை தாங்கள் எதிர்கொண்டதே இல்லை என்று அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஹிரோஷிமா பகுதியில் உள்ள ஆறுகளின் கரை உடைந்ததில் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், டஜன் கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர்.
பிற செய்திகள்:
- ஜப்பான் கனமழையால் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை
- லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?
- உறவுகளின் அழகியல் - பிபிசி தமிழ் நேயர்களின் ஆச்சரியப் படங்கள்
- தென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்?