அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வரலாற்று சிறப்புமிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் இறுதிவடிவமானது!
வியன்னா: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் இறுதிவடிவம் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
ஈரான் 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனா மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் அணுசக்தி திட்டத்தை தொடங்கியது. இதற்கு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஈரான் அணு குண்டு தயாரிக்கவே அணுசக்தி திட்டத்தை தொடங்கியிருப்பதாக குற்றம் சாட்டின. இதை ஈரான் மறுத்தது. மின் உற்பத்தி போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்தது.
ஆனால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 வல்லரசு நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ள ஜெர்மனியும் ஏற்றுக் கொள்ளவில்லை. அணு சக்தி திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இதை ஏற்காததால் அந்நாட்டின் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 5 வல்லரசு நாடுகள் மற்றும் ஜெர்மனியுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் இறங்கி வந்தது.
ஈரானின் அணு திட்டங்களை வல்லரசு நாடுகள் பார்வையிட அனுமதிப்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக ஈரானுடன் வல்லரசு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜரீப் மற்றும் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை தலைவர் மொகெரினி ஆகியோர் கூட்டாக அறிவிக்க உள்ளனர்.