ஐஎஸ்ஐஎஸ் பயங்கரம்: பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. 200க்கும் அதிகமானோர் பரிதாப சாவு
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-யை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியான கராடாவில் ஏராளமான கடைகள் உள்ளன. ரமலான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ரமலான் நோன்பு தொடர்பான வர்த்தகத்தில் மக்களும், வியாபாரிகளும் இருந்ததைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை மேற்கொண்டனர்.
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். பலத்த சத்தத்துடன் கார் வெடித்து சிதறியதில், வர்தக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நேற்று நடந்த இந்த விபத்தில் 119 பேர் பலியாகினர். 170க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் கிழக்கு பாக்தாத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். 16-க்கும் மேற்பட்டோர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஹய்தெர் அல் அபாதி கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் பார்வையிட்ட அவர், நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறினார்.