வீடு வீடாகப் போய் “வீரர்களுக்கு”ப் பெண் பார்க்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!!
பாக்தாத்: ஈராக்கை ரணகளப்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்துள்ள பகுதிகளில் புதிய வேலை ஒன்றில் இறங்கியுள்ளனர். அதாவது வீடு வீடாகப் போய் உங்களது வீட்டில் திருமணம் ஆகாத பெண்கள் உள்ளனரா என்று கேட்டு வருகின்றனராம்.
எதற்காக இந்த விசாரணை என்றால் தங்களது குழுவில் உள்ள திருமணமாகாத தீவிரவாதிகளுக்கு அந்தப் பெண்களை மணம் செய்து வைக்கவாம்.
தீவிரவாதிகளின் இந்த செயலால் ஈராக் மக்கள் குறிப்பாக பெண்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சில நல்ல விஷயங்களும் நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
வீடு வீடாக பெண் வேட்டை
பைஜி என்ற நகரை கிட்டத்தட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இங்குதான் பெண் பார்க்கும் வேட்டை மும்முரமாக நடந்து வருகிறதாம்.
அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து
இதுகுறித்து அபு லாஹித் என்பவர் கூறுகையில், எனது வீட்டுக்கும் அவர்கள் வந்தனர். அவர்களிடம், எனது வீட்டில் இரு பெண்களே உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகி விட்டது என்று கூறினேன். ஆனால் அவர்கள் நம்பாமல் அவர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டு சோதித்துப் பார்த்தனர் என்றார். அடையாள அட்டையில் திருமணமாகி விட்டதா இல்லையா என்பது குறிப்பிட்டிருக்கும் என்பதால் இந்த சோதனையாம்.
மோசூல் மக்கள் மகிழ்ச்சி
இதற்கிடையே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் மோசூல் நகர மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரணம், இத்தனை காலமாக சுதந்திரமாக நடமாட விதிக்கப்பட்டிருந்த தடையை தீவிரவாதிகள் விலக்கியதால். மேலும் சோதனைச் சாவடிகளையும் கூட அவர்கள் நீக்கி விட்டனராம்.
வியாபாரிகளுக்கு கிடுக்கிப்பிடி
மேலும் வியாபாரிகள் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்குமாறும் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனராம். இதனால் மோசூல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குரூர முகத்தையும் காட்டும் தீவிரவாதிகள்
அதேசமயம், தங்களது குரூர முகத்தையும் காட்ட தீவிரவாதிகள் தயங்குவதில்லை. மோசூல் நகரில், முகத்தை முழுமையாக மூடாமல் வந்த பெண்ணையும், அவரத கணவரையும் தீவிரவாதிகள் கட்டி வைத்து சவுக்கடி தண்டனை கொடுத்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனராம்.
டிவி கூடாது.. புகை பிடிக்கக் கூடாது
இஸ்லாமிய சட்டத்தையும் தீவிரவாதிகள் முழுமையாக அமல்படுத்துகின்றனராம். அதன்படி பொது இடங்களில் முகம் தெரிய பெண்கள் நடமாடக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, டிவி பார்க்கக் கூடாது என்று கெடுபிடி செய்கின்றனராம்.
அல் கொய்தா போலவே
முன்பு ஈராக்கில் அல் கொய்தா கை ஓங்கியிருந்தபோது இப்படித்தான் தங்களது போராளிகளுக்கு ஈராக் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். அதேபோல இப்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் நடப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.