மனித உறுப்புகளை விற்று நிதி திரட்டும் ஐஎஸ்ஐஎஸ்: ஈராக் தூதர் குற்றச்சாட்டு
நியூயார்க்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மனித உறுப்புகளை விற்று தீவிரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டுவதாக ஐ.நா.வுக்கான ஈராக் தூதர் தெரிவித்துள்ளார்.
உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். ஈராக் மற்றும் சிரியாவில் ஆட்களை கடத்துவது, கொல்வது, பெண்களை கடத்தி சீரழித்து அவர்களை விலங்குகளைப் போல சந்தையில் விற்பது ஆகியவற்றை செய்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.வுக்கான ஈராக் தூதர் முகமது அல் ஹக்கீம் புதிய தகவலை அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிறுநீரகங்கள் போன்ற பாகங்கள் இல்லாமல் பல மனித உடல்கள் கிடைத்துள்ளன. வேண்டுமானால் வந்து அவற்றை பரிசோதனை செய்யுங்கள். மனித உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுக்க மறுத்த சுமார் 12 மருத்துவர்களை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். மனித உறுப்புகளை விற்று தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுகிறார்கள். இது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும்.
இந்த தீவிரவாத அமைப்பு மனித உரிமைகளை மீறிவிட்டது. அவர்கள் ஈராக் மக்களுக்கு பெருங்கொடுமை இழைத்துவிட்டனர் என்றார்.