ரோம் எரிந்தபோது நீரோ பிடில் வாசித்த கதை…!. “லெக்கிங்ஸ்” பற்றிக் கவலைப்பட்ட ஈரான்!!
டெஹ்ரான்: உள்நாட்டுப் போரால் ஈராக்கே கதி கலங்கிப் போயுள்ள நிலையில், பக்கத்து நாடான ஈரானில், நாடாளுமன்றத்தில் பெண்கள் லெக்கிங்ஸ் அணிவது குறித்துக் காரசாரமாக விவாதித்துள்ளனர் அந்த நாட்டு எம்.பிக்கள்.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது.
ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் ஈராக்கை தீவிரவாதிகள் பிடித்து விடுவார்களோ என்ற பதைப்புடன்உலக நாடுகள் கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றத்தில் ஆடை அணிவது குறித்து விவாதம் நடத்தியுள்ளனர். எம்.பிக்கள் அலி மொதஹரி மற்றும் மௌவ்சாவி லார்வானி ஆகியோர் ஈரானில் பெண்கள் இஸ்லாமிய மத கோட்பாடுப்படி பர்தா ஆடை அணிவதற்காக எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு உள்துறை அமைச்சர் அப்துல் ரெஸா ரஹ்மானி பதிலளித்தார். முன்னதாக காரசாரமாக பேசிய உறுப்பினர்கள், பெண்கள் லெக்கிங்ஸ் ஆடையை அணிகிறார்கள். இது ஹிஜாப் சட்டத்தற்கு புறம்பானது, இஸ்லாமிய மத நெறிமுறைகளை மீறும் செயல். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டனர்.
இதுகுறித்து ரஹ்மானி பதிலளிக்கையில் உள்துறை அமைச்சகம் ஹிஜாப் சட்டத்த முறையாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எ"த்து வருகிறது. அதை முழு வீச்சில் அமல்படுத்தி வருகிறோம். லெக்கிங்ஸ் பிரச்சனைக்கும் முடிவு கட்டப்படும் என்றார்.
பக்கத்து நாட்டில் பயங்கர கலவரமும், தீவிரவாதிகள் கும்பல் கும்பலாக நகரம் நகரமாக தாக்கி நாட்டைப் பிடிக்க முயன்று வரும் நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தில் லெக்கிங்ஸ் பற்றி விவாதம் நடந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஷியா முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஈரானுக்கு வெகு அருகே உள்ள ஈராக்கிய நகரங்களான திக்ரித்தும், மொசூலும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளது. இருப்பினும் ஈரான் நாடாளுமன்றமோ, அரசோ அதுகுறித்துக் கவலைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 40 ஆண்டுகளில் ஈரான் பொருளாதாரம் மோசமாகியுள்ளது. 30 சதவீத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.