துணை அதிபர், துணை பிரதமர் பதவிகள் ரத்து: ஈராக் பிரதமர் அதிரடி முடிவு!
பாக்தாத்: ஈராக் நாட்டில் துணை அதிபர், துணை பிரதமர் பதவிகளை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஈராக். எனவே, அங்கு சிறப்பான ஆட்சி நிர்வாகம் வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வந்தன.
மேலும், அங்கு நிர்வாக சீர்திருத்தங்கள் செய்வதற்கு பிரதமர் ஹைதர் அல் அபாதிக்கு ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லா அலி அல் சிஸ்டானி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘துணை அதிபர், துணை பிரதமர் பதவிகளை ரத்து செய்யப்போவதாக' தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் பதவியில் கட்சிவாரி ஒதுக்கீட்டை ரத்து செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஈராக் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் அபாதிக்கு முன்பு பிரதமர் பதவி வகித்த மாலிக்கியும், தற்போது துணை அதிபராக இருந்து வருகிறார். துணை அதிபர் பதவி ரத்தாவது அவருக்கு அடியாக அமையும் எனக் கூறப்படுகிறது.
ஈராக்கில் 3 துணை அதிபர்கள், 3 துணை பிரதமர்கள் பதவி வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.