ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலாத்காரம் செய்து அடிமைகளாக்கினர்: கதறும் யாஸிதி பெண்கள்
ஈராக்: இராக்கில் யாஸிதி இனப் பெண்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களைப் பாலியல் அடிமைகளாக விற்றது குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்த யாஸிதிகள் அந்தத் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த போது தாங்கள் அனுபவித்த கொடூரங்கள் குறித்து பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக்கின் சிஞ்சார் (Sinchar) பகுதியில் வாழும் யாஸிதி என்னும் சிறுபான்மையினத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
இவர்களில் பலரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கினர் தீவிரவாதிகள் 7000 யாஸிதி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாலியல் அடிமைகளாக்கப்பட்ட அவர்கள், விபச்சார சந்தைகளில் தீவிரவாதிகளால் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்த சில யாஸிதி பெண்கள் பிபிசி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.
பாலியல் அடிமைகள்
கண்ணீர் மல்க அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியளித்தது. விபச்சார சந்தைகளில் சில பெண்களும், சிறுமிகளும் வெறும் 12 டாலர்களுக்கு வாங்கப்பட்டனர்.
விலைக்கு விற்பனை
இதனை தொடர்ந்து வாங்கப்படாத பெண்களை தீவிரவாதிகள் அடித்து காயப்படுத்தி வலுக்கட்டாயமாக விற்றனர். விபச்சார சந்தையில் ஐரோப்பாவை சேர்ந்த ஜிகாதி ஒருவர் ஐந்து பெண்களை விலைபேசி வாங்கி சென்றார்.
பூப்பெய்தாத பெண்கள்
யாஸிதிகள் மற்றும் கிறிஸ்தவ பெண் அடிமைகள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் பூப்பெய்தாதப் பெண்களுடன் கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் எனவும் தீவிரவாதிகள் துண்டு பிரசுரம் ஒன்றில் அறிவித்துள்ளனர்.
தற்கொலைக்கு முயற்சி
மேலும் தீவிரவாதிகளின் கொடுமையை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார் எனவும் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.