மணிக்கு 210 கி.மீ வேக காற்றுடன் புளோரிடாவில் கோரத்தாண்டவம் ஆடிய இர்மா புயல்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை அடுத்துள்ள தீவுக்கூட்டத்தை இர்மா புயல் தாக்கியது. 130 மைல்கள் வேகத்தில் (210 கி.மீ) பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உதயமான காற்று மெல்ல இர்மா புயலாக மாறி கரீபியன் தீவுகளில் கோரதாண்டவம் ஆடியது. தற்போது இர்மா புயல் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
புளோரிடா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புளோரிடா கீஸ் தீவுக்கூட்டத்தை இந்திய நேரப்படி ஞாயிறு மாலை 6 மணியளவில் இர்மா புயல் தாக்கியதாக அமெரிக்காவின் தேசிய புயல் மையம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று
புயல் தாக்கியபோது, அந்த பிராந்தியத்தின் முக்கிய நகரமான மியாமி பகுதியில் நேரம் ஞாயிறு காலை சுமார் 8 மணியாகும் மணியாகும். புயல் தரையை கடக்கும்போது காற்று அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ. வேகத்தில் வீசியது. வடகிழக்கு திசையில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
60 லட்சம் மக்கள் இடம் பெயர்வு
புயல் எச்சரிக்கை காரணமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். இருப்பினும் புயலால் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன மழை
புளோரிடாவை ஒட்டிய மியாமி கடற்கரை, நபேல்ஸ், ஓர்லாண்டோ , ஜேக்சன்வில்லி, மரத்தான், சரசோட்டா, டாம்பா, டோனா, நகரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
நகரும் புயல்
இந்த புயல் புளோரிடாவின் மேற்கு கடற்கரை வழியாக நகர்ந்து போர்ட் மையர்ஸ் வழியாக டாம்பாவுக்கு செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது படிப்படியாக புயலின் வேகம் குறையும். புளோரிடாவின் கிழக்கு கடற்கரை பகுதியில்தான் மியாமி உள்ளபோதிலும், முன்னெச்சரிக்கையாக அந்த நகரத்திலும், பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயற வைக்கப்பட்டுள்ளனர்.