படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் புளோரிடா
மியாமி: இர்மா புயலில் சிக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருப்பினும் இன்னும் பெரும்பாலான பாதிப்புகள் சரி செய்யப்படாமலேயே உள்ளது.
இர்மா சூறாவளி கரீபியன் மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதி சமூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலால் அமெரிக்கா பொருளாதார அளவில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது.
அட்லாண்டிக் கடலில் உருவான புயல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த புயல் இதுதான். இர்மா, புளோரிடா மாகாணத்தை ஞாயிற்றுக்கிழமை காலையில் மணிக்கு 210 கி.மீ வேகத்தில் தாக்கியது. இதனால் கூட்டம் கூட்டமாக மக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்தனர். அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றாக இது மைந்தது.
பல பில்லியன் பாதிப்பு
இந்த புயல் பல பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படிப்படியாக இயல்பு நிலைக்கு சில பகுதியினர் திரும்பினாலும் பெரும்பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. புளோரிடா துறைமுகத்தில் மூழ்கிய நான்கு படகுகளும் ஒரு துறைமுக கப்பலையும் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இடையூறாக உள்ள அனைத்து சிதைப் பொருட்களையும் அகற்றியுள்ளனர். துறைமுகத்தின் வடக்கு வாயில் செவ்வாய் மாலையிலிருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது. துறைமுகத்தின் தெற்கு வாயில் புதன்கிழமை காலையிலிருந்து செயல்படுகிறது.
எரிபொருள் விநியோகம் ஆரம்பம்:
துறைமுகத்தில் இயங்கி வந்த பன்னிரண்டு பெட்ரோலியம் விற்பனை மையங்கலில் 10 எரிபொருள் ( சோலின்) விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது. அதனால் இனி வாகனங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு தவிர்க்கப்படும். தண்ணீரில் பாதிக்கப்பட்ட மிஞ்சிய இரண்டும் சில நாட்களில் இயங்க ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியாமி பீச் ஐஸ் பாக்
அமெரிக்காவில் பிரபலமான சுற்றுலா தலமான மியாமி பீச் இர்மாவுக்காக மூடப்பட்டது. அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதத்தை உள்ளடக்கிய ஒரு பெரிய சுற்றுலா பொருளாதார மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இர்மாவுக்காக மக்களின் வருகை தடை செய்யப்பட்ட மியாமி பீச் தற்போது முழு வீச்சில் செயல்படுகிறது. மின்னிணைப்பு பிரச்சனைகளும் சில போக்குவரத்து தடைகளும் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை.
இர்மா "கொள்ளையர்கள்"
இர்மா புயல் பாதிப்பு நேரத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் புகுந்து கடற்கரையோர கடைகளில் தங்கள் கைவரிசையை காட்டினர். அவர்களை பின்னர் மியாமி போலீஸ் படையினர் கைது செய்தனர். இதுபோன்ற இயற்கை பேரழிவுகளின் போது திருடர்கள் மனிதம் மறப்பது எல்லா ஊர்களிலும் நடந்து தான் வருகிறது. அதே சமயம் இது போன்ற இயற்கை பேரழிவுகள் போது தான் மனிதனின் மனித தன்மை வெளிவந்து உதவி கரங்கள் நீண்டு இன்னும் சாகாத மனித நேயத்தையும் காட்டிச் செல்கிறது. நம் சென்னை வெள்ளைப் பெருக்கின்போது மக்கள் மனிதத்தை வெளிப்படுத்தியதை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது.
அதிகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு:
ஏற்கனவே நடந்த கொள்ளையால் அலெர்ட் ஆன மியாமியில் இப்போது பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவதாக மியாமி பீச் மேயர் பிலிப் லெவின் தெரிவித்துள்ளார். புயலுக்காக வெளியேற்றப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு வர விரும்பினாலும் அவர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. இன்னும் பல பகுதிகளில் மின்னிணைப்பு திரும்ப வரவில்லை. அலைபேசி நெட்ஒர்க் இணைப்பு திரும்ப வராத நிலையும் நிலவுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு, வாகனத்துக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு, திறக்கப்படாத கடைகள் என இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிக அதிகம். அதனால் மக்கள் வீட்டுக்கு இப்போது திரும்ப வேண்டாம் என அரசாங்கம் அருவுறுத்தியுள்ளது. புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். அதிலிருந்து நாம் படிப்படியாக வெளிவருவோம், பொறுமையோடு இருப்போம் என புளோரிடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல்: சஹாயா, சார்லட்