டென்சனா...? யாரை வேணும்னாலும் கடிங்க, நகத்தை மட்டும் கடிச்சிடாதீங்க... அப்புறம் கேன்சர் வந்துரும்!
லண்டன்: ஓவர் டென்சனில் இருக்கும் போது பெரும்பாலானவர் அதை வெளிக் காட்டுவது நகம் கடித்தல் மூலமாகத் தான்.
சினிமாக்களிலும் டென்சனாக இருப்பவர்கள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் விரல் நகங்களைக் கடிக்கத் தொடங்கும் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். சிலர் நகத்தையும் தாண்டி விரல் நுனி தோலையும் கடிக்கத் தொடங்கி, புண்ணாக்கிக் கொள்வர்.
நகம் தானே, வெட்ட வெட்ட வளர்ந்து விடும் என்ற எண்ணத்தில் அதனைக் கடித்தாலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஏராளம் என்கிறது மருத்துவ வட்டாரம். கொடிய புற்றுநோய் வருவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறதாம்.
இதோ நகம் கடித்ததால் ஏற்படும் ஏற்படும் மோசமான விளைவுகள் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது :-
செரிமானப் பிரச்சினை...
சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை வெளியே துப்பாமல், விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு. இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.
குடல்வால் வரலாம்...
சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல்வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல்வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
தொற்றுக்கள் ஏற்படும்...
எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
பற்களைப் பாதிக்கும்...
தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும்போது அது பற்களின் எனாமலை பாதித்து விடும். பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.
விரல் நுனி அழுக்குகள்...
நகம், பாக்டீரியா வளரும் இடம், சல்மனெல்லா, இ.கோலி, பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும்போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக் கொள்ளும்.
கேன்சர் வரலாம்...
இவற்றின் உச்சகட்டமாக நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால், புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக பயமுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.