செல்போன் பயன்படுத்திய 3 பெண்களின் கை துண்டிப்பு: ஆண்களுக்கு சவுக்கடி... ஐ.எஸ்.ஐ.எஸ். வெறித்தனம்!
பாக்தாத்: ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய ஆண்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்கியுள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள். அதே சமயம், செல்போன் பயன்படுத்திய 3 பெண்களின் கைகளையும் அவர்கள் துண்டித்துள்ளனர்.
ஈராக்கில் 2-வது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து தனிநாடாக அமைத்துள்ளனர். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அவர்கள், பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை விதித்துள்ளனர்.
அதில் முக்கியமான ஒன்று மக்கள் தனிப்பட்ட முறையில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது என்பது. காரணம், தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கி வருகிறது. எனவே, அமெரிக்க கூட்டு படைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து யாராவது ரகசியமாக செல்போனில் தகவல் கொடுத்து விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிநபர்கள் செல்போன் பயன்படுத்த அங்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
அதையும் மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 30 சவுக்கடி தண்டனை வழங்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் மொசூல் பகுதியில் 5 ஆண்கள் செல்போன் பயன்படுத்துவதை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 5 ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப் பட்டது.
இது தவிர, பொதுமக்கள் முன்னிலையிலேயே 3 பெண்களின் கைகள் வெட்டி துண்டிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் செய்த குற்றம் என்ன? எதற்காக இந்த தண்டனை வழங்கப் பட்டது என்பது குறித்து தீவிரவாதிகள் விளக்கமளிக்கவில்லை. அப்பெண்களும் செல்போன் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் முதல் மொசூல் நகரில் உள்ள அனைத்து டெலிபோன் மற்றும் செல்போன்களின் நெட்ஒர்க்குகளும் முற்றிலுமாக முடக்கப் பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.