ஐ.எஸ்.க்கு ஆதரவாக பிரான்ஸ் பிணைக் கைதி தலையை துண்டிப்போம்- மிரட்டுவது அல்ஜீரிய தீவிரவாதிகள்!
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தும் அமெரிக்காவுக்கு பிரான்சு ஆதரவு அளித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து பிரான்ஸ் போர் விமானங்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குண்டு வீச்சை தொடங்கின.
இந்த நிலையில் அல்ஜீரியாவுக்கு குகைகள் குறித்து ஆய்வு நடத்த சென்ற பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் ஹெர்வ் குயர்தெல் என்பவரை ஜீன்ட் - அல் - கலிபா (கலிபாக்களின் போர் வீரர்கள்) என்ற அல்ஜிரியா தீவிரவாத இயக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளது.
இவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடரபு உடையவர்களாம். இத்தகவலை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லூரண்ட் பெப்பியசும் உறுதி செய்து உள்ளார்.
இதனிடையே அல்ஜீரியா தீவிரவாதிகள் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ள பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் ஹெர்வ் குயர்தெல் இருக்கிறார். அவர் அருகே முகமூடி அணிந்த 2 தீவிரவாதிகள் உள்ளார்.
அவர்கள் குயர்தெலை துப்பாக்கி முனையில் வைத்துள்ளனர். இன்னும் 24 மணி நேரத்தில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பிரான்ஸ் நிறுத்த வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ள குயர்தெல் தலையை துண்டித்து படுகொலை செய்வோம் என தெரிவித்துள்ளனர். ஈராக், சிரியாவில்தான் இந்த தலை துண்டிப்பு பயங்கரத்தை ஐ.எஸ். இயக்கம் அரங்கேற்றி வந்த நிலையில் அல்ஜீரியா தீவிரவாதிகளும் இக்கொடூரச் செயலை அரங்கேற்றப் போவதாக மிரட்டியிருப்பது பிரான்ஸை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.