பிலிப்பைன்ஸ் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி மாணவ, மாணவிகளை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்.. பதற்றம்!
தெற்கு பிலிப்பைன்ஸில் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் பள்ளி மாணவ, மாணவிகளை துப்பாக்கி முனையில் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிடானவ்: தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிடானவ் தீவில் உள்ள பள்ளிக்குள் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மாணவ, மாணவிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.
தனி நாடுக்கோரி கொடூர செயல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினர் கடந்த 23ஆம் தேதி முதல் தெற்கு பிலிப்பைன்ஸிலும் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்குமான சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று காலை மிடானவ் தீவில் உள்ள பள்ளிக்குள் தீவிரவாதிகளின் ஒரு அமைப்பான பிஐஎஃப்எஃப் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்.
100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மாணவ, மாணவிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிக்காவயன் நகரின் மேயர் மாணவ, மாணவிகளை தீவிரவாதிகளிடமிருந்து உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.