அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐஎஸ்ஸால் சீரழிக்கப்பட்ட பெண்ணின் பெயர் பரிந்துரை
ஜெனிவா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், போப் பிரான்சிஸ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் சைக்கிள் குழு உள்ளிட்டோரின் பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பலரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டிக்கு 200க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வரும். இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டோரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் சைக்கிள் குழு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பலாத்காரம் செய்யப்பட்ட யசிதி இன பெண்ணான நாதியா முராத் தன்னைப் போன்றவர்களுக்காக பாடுபட்டு வருகிறார். அவரது பெயரை நார்வேயைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற டெஸ்மன்ட் டுட்டு போப் பிரான்சிஸின் பெயரை பரிந்துரைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் பெண்கள் சைக்கிள் குழுவை இத்தாலியைச் சேர்ந்த 118 அரசியல் தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
வரும் 29ம் தேதி நோபல் கமிட்டி கூடி பரிந்துரை செய்யப்பட்டோர் குறித்து ஆலோசிக்க உள்ளது.