புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஜெட்டா: புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். துருக்கி, வங்கதேசம், ஈராக், சவுதி என பல நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் மதீனா உட்பட சவுதியிக் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மதீனா மசூதி அருகே கார் மூலம் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இதுவரை 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது
இஸ்தான்புல் தாக்குதல்
கடந்த 29ம் தேதி துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் உடல் சிதறி பலியாகினர்.147 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று துருக்கி பிரதமர் பினாலி குற்றம்சாட்டினார்.
டாக்காவில் தாக்குதல்
வங்கதேச தலைநகர் டாக்காவில் வெள்ளிக்கிழமையன்று இரவு பிரபல உணவகத்துக்குள் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 வெளிநாட்டினர், 2 போலீசார் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.
பிணைக்கைதிகள்
குல்ஷன் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. மிகவும் பாதுகாப்பு மிகுந்த இப்பகுதியில் உள்ள ஹோலே ஆர்டிசன் பேக்கரி உணவகத்துக்கு வெளிநாட்டினர் அதிக அளவில் வருவது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணிக்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்த உணவகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை சிறைபிடித்தனர்.
இந்திய மாணவி பலி
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்து இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். இதில் 20 வெளிநாட்டினர், 2 போலீஸார் பலியாயினர்.இந்த தாக்குதலில் பலியானவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தரிஷி ஜெயின் என்ற மாணவியும் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றது.
பாக்தாத் குண்டு வெடிப்பு
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஞாயிறன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய பயங்கர கார் வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பாக்தாத் நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதிகளில் இந்த சம்பவம் நடந்தது.
ஐ.எஸ் தீவிரவாதிகள்
ரமலான் நோன்பு தொடர்பான வர்த்தகத்தில் மக்களும், வியாபாரிகளும் இருந்ததைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு நாங்களே பொறுப்பு என்று ஐஎஸ் அமைப்பு கூறியுள்ளது.
ரமலான் மாதத்தில் தாக்குதல்
இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமிய நாடுகளின் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவது உலக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.