கொரோனா வைரஸ் ஆய்வில் அஜாக்கிரதை... சீனாவிலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்..!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வவ்வால்கள் கடித்ததை வூகான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.
உலகையை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் எப்படி பரவியது அதன் தோற்றுவாய் என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. வூகானில் உள்ள மீன் மார்க்கெட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக முதலில் தகவல் வெளியாகிய நிலையில் இப்போது பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், வூகான் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உலக சுகாதார அமைப்பு விதிமுறைகளுக்கு நேர் மாறாக, இன்னும் சொல்லப்போனால் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ள எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு நடத்தியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முகக்கவசம் மற்றும் கையுறை அணியாமல் ஆய்வு நடத்துவது போன்ற வீடியோ வெளிவந்துள்ளதால் ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் சீனா அஜாக்கிரதை போக்குடன் இருந்தது அம்பலமாகியுள்ளது. இதனிடையே இதேபோல் மற்றொரு ஆராய்ச்சி நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர் ஒருவர், குகையில் வவ்வால்களிடம் நடத்திய ஆய்வின் போது கையுறையை கிழித்துக்கொண்டு கையில் கூர்மையான ஊசி குத்தியது போன்று இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 589 பேருக்கு தொற்று.. 770 பேர் டிஸ்சார்ஜ்.. 7 பேர் உயிரிழப்பு..!
இதன் மூலம் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் விவகாரத்தை சீனா எந்தளவுக்கு மெத்தனமாக கையாண்டிருக்கிறது என்பது இப்போது தெரிய வருகிறது. இதனிடையே தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சி தேவையில்லை என சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதனை மீறி சீனாவின் வூகான் நகரத்துக்கு சென்றுள்ள உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் கொரோனா வைரஸின் தோற்றுவாய் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் தொடர்பாக முழுமையான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.