இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' மாபெரும் கருத்தரங்கம்!
தம்மாம்: சவுதியில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நிமிர்ந்து நில் - மண்டியிடாதே என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கை நடத்தியது.
சவுதி அரேபியா - கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்த எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபோரம்-தமிழ் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சி இந்தியா முழுவதும் நடத்திவரும் 'நிமிர்ந்து நில் - மண்டியிடாதே' என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக தம்மாம் பகுதியிலும் கருத்தரங்கம் நடைபெற்றது.
கடந்த 14ம் தேதி இரவு 8.30 மணிக்கு அல் கோபர் - ரஃபா மெடிக்கல் சென்டர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக தலைவர் காயல் அபூபக்கர் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியை இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழக பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா தொகுத்து வழங்கினார். தம்மாம் கிளைத் தலைவர் நல்லூர் சைபுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து கிழக்கு மாகாணத் துணைத் தலைவர் மௌலவி இக்பால் மன்பஈ அறிமுக உரை ஆற்றினார்.
மாநிலத் தலைவர் மௌலவி தெஹலான் பாகவி அவர்களை கண்ணியப்படுத்தும் வகையில் தம்மாம், கோபர், சிஹாத், ஜுபைல், அல்ஹஸா கிளைகளின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய தலைவர் வசீம்(கர்நாடகா )மற்றும் இந்தியா பிரடெர்னிட்டி ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் தலைவர் சாதிக் மீரான் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மௌலவி தெஹ்லான் பாகவி 'நிமிர்ந்து நில், மண்டியிடாதே!' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தமது உரையில் இந்திய தேசிய அளவில் கட்சியின் அவசியத்தையும் அது முன்னெடுத்துச் செல்லும் நேர்மறை அரசியலையும், சமகால அளவில் அனைத்து சமூகத்தினருக்குமான பொதுவான பிரச்சனைகளை அணுகும் முறைகளையும் அழகாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாநிலங்களுக்கான தலைவர் வசீம் தலைவருக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார்.
எஸ்டிபிஐ கட்சியின் அதிகாரப்பூர்வ மாதமிருமுறை பத்திரிக்கையான 'புதிய பாதை' சந்தா சேர்ப்பு இயக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற சந்தாக்களின் முதல் பகுதியை கிளை நிர்வாகிகள் தலைவரிடம் ஒப்படைத்தனர். அல்கோபர் கிளைத் தலைவர் அதிரை அபுபக்கர் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.