குஜராத் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி: ஹெட்லி
நியூயார்க்: குஜராத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று 26/11 தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளிக்கும் தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். 2 நாட்களாக அவர் வாக்குமூலம் அளித்து வந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று அவரால் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் இன்று 3வது நாளாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
இஷ்ரத் ஜஹான்
குஜராத்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இஷ்ரத் ஜஹான் உண்மையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர். அவர் ஒரு போலீஸ்காரரை கொல்லும் ஆபரேஷனில் கலந்து கொண்டவர்.(இஷ்ரத் ஜஹான் அப்பாவி என்றும், அவரை போலி என்கவுன்ட்டரில் போலீசார் கொன்றுவிட்டனர் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் ஹெட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.)
இந்தியா
இந்தியாவில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவு செயல்பட்டு வந்தது. அந்த பிரிவிற்கு அபு மசார் தலைமை தாங்கி வந்தார்.
பணம்
நான் மும்பைக்கு செல்லும் முன்பு ஐஎஸ்ஐயைச் சேர்ந்த மேஜர் இக்பால் எனக்கு ரூ.17 லட்சம் அளித்தார். அந்த பணம் உளவு பார்ப்பதற்காக அளிக்கப்பட்டது.
வங்கி கணக்கு
14.9.2006 அன்று நான் மும்பை தர்தியோ ஏசி மார்க்கெட் பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு துவங்கினேன். 11.10.2006 அன்று தவாஹுர் ராணா எனக்கு ரூ.66 ஆயிரத்து 505 அளித்தார். 7.112006 அன்று ராணா எனக்கு 500 அமெரிக்க டாலர் அளித்தார். நவம்பர் 30ம் தேதி ராணா எனக்கு ரூ. 17 ஆயிரத்து 636 அளித்தார். பின்னர் டிசம்பர் மாதம் 1000 அமெரிக்க டாலர் அளித்தார்.
ராணா
தாக்குதலுக்கு முன்பே ராணா மும்பை வந்துள்ளார். மும்பையில் அவருக்கு ஆபத்து என்று கூறி அவரை திரும்பிச் செல்லுமாறு நான் தான் கூறினேன். ராணா அனுப்பிய பணம் இன்டஸ் இன்ட் வங்கியின் நரிமன் கிளை கணக்கிற்கு வந்தது. மேலும் சஜித் மிர் எனக்கு பாகிஸ்தான் பணம் ரூ. 40 ஆயிரம் அளித்தார்.
மும்பை அலுவலகம்
மும்பை தர்தியோ ஏசி மார்க்கெட் பகுதியில் எனது அலுவலகம் இருந்தது. எனக்கு மேஜர் இக்பால் இந்திய ரூபாயின் கள்ளநோட்டுகளை அளித்தார். மேஜர் அப்துல் ரஹ்மான் பாஷாவும் எனக்கு ரூ.18 ஆயிரம் அளித்தார்.
அலுவலகம்
1.11.2006 அன்று மும்பை அலுவலகத்திற்கான ஒப்பந்தம் போரா என்பவருடன் கையெழுத்தானது. 16.7.2008 எனது அலுவலகத்திற்கான உரிமத்தை புதுப்பித்தேன். தர்தியோ அலுவலகத்தை மூடுவது ராணாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் மும்பை அலுவலகத்தை மூட வேண்டும் என நானும், மேஜர் இக்பாலும் நினைத்தோம்.
தாக்குதல்
மும்பை தாக்குதல் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு அலுவலகத்தை மூடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தர்தியோ அலுவலகம் பொது மக்கள் பயன்படுத்தும் குடியேற்றத்துறை அலுவலகமாக செயல்பட்டது. குடியேற்றத்துறையின் பெயரில் நாங்கள் எங்கள் வேலைகளை செய்தோம்.
பாகிஸ்தான் ராணுவம்
ராணா பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார். பின்னர் தான் அவர் ராணுவத்தில் இருந்து விலகினார். மும்பை தாக்குதல் குறித்து நான் அவருடன் தான் தொடர்பில் இருந்தேன்.
ரிலையன்ஸ் வெப்வேர்ல்டு
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் வெப்வேர்ல்டுக்கு நான் 2007ம் ஆண்டில் செப்டம்பர் 12, 18 ஆகிய தேதிகள் மற்றும் அக்டோபரில் 30ம் தேதி என மூன்று முறை சென்று இன்டர்நெட்டை பயன்படுத்தியுள்ளேன். அங்குள்ள பதிவேட்டில் நீங்கள் என் கையெழுத்தை பார்க்கலாம்.
கோவில்
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழி வாங்க குஜராத்தில் உள்ள அக்ஷர்தம் கோவிலை தாக்க முஜம்மில் பட் திட்டமிட்டார். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.