சிரியாவில் 81 வயது தொல்லியல் நிபுணரின் தலையை துண்டித்த ஐஎஸ் தீவிரவாதிகள்
சனா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவின் பால்மிரா நகரில் 81 வயது தொல்லியல் நிபுணரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள பழமைவாய்ந்த பால்மிரா நகரை கடந்த மே மாதம் கைப்பற்றினர். நகரை கைப்பற்றிய யைகோடு அங்கிருந்த அருங்காட்சியகத்திற்குள் புகுந்து பழமையான சிலைகளை தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். பல சிலைகளை அவர்கள் எடுத்துச் சென்று விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விலை மதிப்பில்லா பழங்கால பொருட்கள் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள அருங்காட்சியகத்தின் தலைவர் காலித் அல் ஆசாத்(81) என்பவரை தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். அவரை ஒரு மாதமாக சிறைபிடித்து வைத்திருந்தனர். ஆனால் அவர் அந்த பழங்கால பொருட்கள் இருக்கும் இடத்தை தெரிவிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதையடுத்து தீவிரவாதிகள் மக்கள் கண்முன்பு அவரின் தலையை துண்டித்து கொலை செய்தனர். பின்னர் அவரின் உடலை பொதுஇடத்தில் ஒரு கம்பத்தில் தொங்கவிட்டனர்.
இது குறித்து காலிதின் நண்பர் அப்துல் கரீம் கூறுகையில்,
தீவிரவாதிகள் பால்மிரா நகரை கைப்பற்றியதுமே காலிதை இங்கிருந்து தப்பியோடுமாறு கூறினோம். நீங்கள் மிகவும் முக்கியமானவர் இங்கு இருக்காதீர்கள் என்றோம். ஆனால் அவர் நகரைவிட்டு செல்ல மறுத்துவிட்டார் என்றார்.