224 பேருடன் பயணித்த ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்- ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவிப்பு!!
கெய்ரோ: எகிப்தில் இருந்து 224 பேருடன் புறப்பட்ட ரஷ்யா பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஆனால் எகிப்தின் ஷினாய் தீபகற்ப பகுதியில் அது தொடர்பிழந்தது.
இதன் பின்னர் அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறி விழுந்ததாகவும் அதில் பயணித்த 224 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்பக் கோளாறுதான் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த விமானத்தை தாங்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.
224 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்திருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இந்த தகவலை ஏற்க ரஷ்யா மறுக்கிறது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கி தங்கள் விமானம் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரமில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. எனவே ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? என்பதில் மர்மம் நீடிக்கிறது.