சிரியாவில் இருந்து தப்ப முயன்ற 100 வெளிநாட்டு போராளிகளை சுட்டுக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
டமாஸ்கஸ்: ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டு சிரியாவில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 100 வெளிநாட்டு போராளிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பல்வேறு வெளிநாட்டவர்கள் ஈராக் மற்றும் சிரியா வந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து போராடுகிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தவர்களில் பலருக்கு நாடு திரும்பும் ஆசை வந்துள்ளது. அவர்களுக்கு அமைப்பில் இருக்க பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைப்பில் சேர்ந்த 100 வெளிநாட்டு போராளிகள் சிரியாவின் ரக்கா நகரில் இருந்து தங்கள் நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 12 வெளிநாட்டு போராளிகள் நாடு திரும்ப முயன்றபோது அவர்கள் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்டனர்.
சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்துக்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பிற போராளிகள் குழுவுடன் மோதுகிறது என்று போராளிகள் புகார்தெரிவித்துள்ளனர்.
30 முதல் 50 இங்கிலாந்து போராளிகள் நாடு திரும்ப விரும்புகிறார்கள். ஆனால் இங்கிலாந்துக்கு கிளம்பினால் தாங்கள் கொல்லப்படுவோமோ என்ற பயத்தில் அவர்கள் சிரியாவிலேயே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு போராளிகள் தினமும் பணிக்கு வருகிறார்களா என்பதை கவனிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தனியாக ராணுவ போலீஸ் படையை அமைத்துள்ளது. பணிக்கு வராதவர்களுக்கு அந்த படை தண்டனை அளித்து வருகிறது.