அமெரிக்க 'டிரோன்' தாக்குதலில் ஆப்கானிஸ்தான்- பாக். ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பலி
காபுல்: ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதிக்கான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் அமெரிக்கா தலைமையில் நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதி ஐஎஸ்ஐஎஸ் தலைவராக இருந்தவர் ஹபிஸ் சயீத். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நாங்கர்ஹர் மாகாணத்தில் இருக்கும் அச்சின் மாவட்டத்தில் சயீத் தலைமையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அந்த கூட்டத்தை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹபிஸ் உடல் சிதறி பலியானார். மேலும் கூட்டத்திற்கு வந்திருந்த 30 தீவிரவாதிகள் பலியாகினர். தாக்குதலில் பலியான ஹபிஸின் உடலை மீட்ட தீவிரவாதிகள் உடனே அடக்கம் செய்துவிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை பலப்படுத்த தீவிரவாதிகள் முயற்சி செய்து வரும் நிலையில் ஹபிஸ் பலியாகியுள்ளது அவர்களுக்கு மரண அடியாக விழுந்துள்ளது.
முன்னதாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்த அப்துல் ரவூப் காதிம் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.