ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி மோசூல் நகரில் இருந்து தப்பி ஓட்டம்?
ஈராக் படைகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஐ.எஸ்.ஐ,எஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன்: ஈராக்கின் மோசூல் நகரில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவர் பாக்தாதி தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மோசூல் நகரை மீட்பதற்காக அந்நாட்டு ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் குர்து படையினரும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஓட்டம் பிடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் மோசூல் நகரின் பெரும்பாலான பகுதி மீண்டும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதனிடையே திடீரென ஆடியோ வெளியிட்ட அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி, ஐஎஸ் அமைப்பினர் மோசூல் நகரை கைப்பற்ற தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த ஆடியோ ஈராக் ஆட்சியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், பாக்தாதி மோசூல் நகரிலிருந்து தப்பியோடிவிட்டதாக கூறியுள்ளார். இதனை மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறை உறுதி செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐஎஸ் தீவிரவாதிகள் ஓட்டம்பிடிப்பதால் மோசூல் நகர் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.