இலவச ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், குக்கர்: வெளிநாட்டு குடும்பங்களை கவரும் ஐஎஸ்ஐஎஸ்
ராக்கா: அதிநவீன சமையல் அறை பொருட்களுடன் கூடிய வீடுகள் தருகிறோம் என்று கூறி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் வசிப்போவரை தங்கள் அமைப்பில் சேருமாறு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அழைக்கிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் வசிப்போரை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. இலவசங்களை அறிவித்து மக்களை கவர தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளரான உமர் ஹுசைன் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
வாங்க
உங்களின் அடிப்படை தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். அதனால் தைரியமாக உங்களின் குடும்பத்தாரை அழைத்து வாருங்கள். அவர்களை பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம்.
பணம்
எங்கள் அமைப்பில் சேர்ந்தால் உங்களின் மனைவி, குழந்தைகளை கவனித்துக் கொள்ள கூடுதல் பணம் அளிப்போம். குழந்தைகளுக்காக மாதம் மாதம் அளிக்கப்படும் தொகையின் அளவு அதிகரிக்கப்படும்.
ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்
பணம் மட்டும் போதவில்லை என்று நினைக்கிறீர்களா. உங்கள் குடும்பத்தார் வசதியாக இருக்க வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ், குக்கர், மெத்தை, சமையல் அறை பொருட்கள் ஆகியவற்றை இலவசமாக அளிப்போம் என்று ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து
இங்கிலாந்தின் லூட்டன் பகுதியில் வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 12 உறவினர்கள் மற்றும் பிராட்போர்டைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குடும்பம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுள்ளது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இலவசங்களால் கவரப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.