2020-ல் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் ஐ.எஸ் தீவிரவாதிகள் வரைபடம் வெளியீடு
லண்டன் : அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2020 ஆம் ஆண்டில் இந்தியா ஐ.எஸ்.ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் என்று வரைபடம் வெளியிட்டு தீவிரவாதிகள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை மைய தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போரிட்டு வருகிறது. இந்த படைகளுக்கு ஆதரவாக சவுதிஅரேபியாவும் களத்தில் இறங்கியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், தாங்கள் பிடிக்கும் பிணைக் கைதிகளை தலையை துண்டித்தும், உயிரோடு தீ வைத்து எரித்தும், துப்பாக்கியால் சுட்டும் மிக கொடூரமாக கொன்று குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2020-க்குள் ஒட்டுமொத்த இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் ஐ.எஸ் தீவிரவாதிகள் வரைபடத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா, மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பிய நாட்டின் சில பகுதிகள் முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அவர்கள் வெளியிட்டுள்ள வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தாங்கள் பிடிக்கும் பகுதிகளுக்கு அரபு மொழியில் பெயர்களும் சூட்டியுள்ளனர். இந்த தகவல்கள் லண்டனில் இருந்து வெளியாகும் தி மிரர் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.