'கே' என்பதால் வாலிபரை மாடியில் இருந்து கீழே தள்ளிக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆண் ஒருவரின் கண்களை துணியால் கட்டி அவரை உயரமான கட்டிடத்தின் மாடியின் மீது இருந்து கீழே தள்ளி மரண தண்டனை அளித்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷரியா நீதிமன்றத்தை அமைத்து மக்களுக்கு தண்டனை வழங்கி வருகிறார்கள். ஓரினச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு ஷரியா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள அல் ஃபுராத் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை தீவிரவாதிகள் கண்டுபிடித்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தீவிரவாதிகள் அந்த நபரின் கைகளை பின்பக்கமாக கட்டி உயரமான கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்றனர்.
மாடியில் அவரது கண்களை துணியால் கட்டி அங்கிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்த தண்டனை பொது மக்கள் முன்பு நிறைவேற்றப்பட்டது. முன்பும் கூட ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆண்களை தீவிரவாதிகள் உயரமான கட்டிட மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.