ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் துணை தலைவர் பலி
மொசுல்: ஈராக்கின் மொசுல் நகர் அருகே அமெரிக்கா ஆள் இல்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை தலைவர் ஹாஜி முத்தாஸ் என்பவர் பலியாகியுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஈராக்கில் உள்ள மொசுல் நகர் அருகே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் துணை தலைவர் ஹாஜி முத்தாஸ் சென்ற காரை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்கியுள்ளது.
இந்த தாக்கதலில் முத்தாஸ் பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்தபோது அந்த காரில் தீவிரவாதிகளின் ஊடக செயலாளர் அபு அப்துல்லாவும் இருந்துள்ளார். ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் முத்தாஸ். அவர் தான் தாக்குதல்களுக்கு திட்டமிடும் முக்கிய மூளையாக இருந்தவர்.
முத்தாஸுக்கு ஃபாதில் அல் ஹயாலி என்ற பெயரும் உள்ளது. அவரின் மரணத்தால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முத்தாஸ் கார் ஒன்றில் மொசுல் நகர் அருகே சென்று கொண்டிருப்பது பற்றி அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தான் அமெரிக்கா அந்த காரை தாக்கி முத்தாஸை கொன்றுள்ளது.