சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம்... முன்பதிவு தொடக்கம்
டமாஸ்கஸ்: ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று சிரியாவில் திறக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். இவர்கள் ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஆவர்.
ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். எதிர்காலத்தில் ஈராக்கின் அண்டை நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் ஆரம்பம்....
2003-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில அரபு நாட்டினர் சேர்ந்து இந்த படையை உருவாக்கினார்கள். 2006-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரமாக செயல்பட ஆரம்பித்த இந்த இயக்கத்தினர் தங்களது படையினை விரிவாக்கினர்.
11 ஆயிரம் போராளிகள்...
சிரியா போருக்கு பிறகு இந்த படையில் உள்ள போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது இந்த இயக்கத்தில் 11 ஆயிரம் பேர் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கிலும், 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரிலும் ஈடுபட்டு உள்ளனர்.
படை விரிவாக்கம்...
ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர்வதற்கு தற்போது 15 ஆயிரம் பேர் வரை தயாராக உள்ளதாகவும், தங்களது படையினரின் எண்ணிக்கையை 60 ஆயிரமாக உயர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளைப் பணம்...
சிரியா மற்றும் ஈராக்கின் வங்கி மற்றும் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த ரூ.12 ஆயிரம் கோடி பணத்தை அடிப்படையாக வைத்தே இவர்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வீரருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
பண உதவி...
அரபு நாடுகள் பலவற்றில் சன்னி முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களும் இவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். இந்த படையின் தலைவராக அபுபக்கர் அல் பக்தாதி செயல்பட்டு வருகிறார்.
தனி நாடு...
வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஐ.எஸ்.-சின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாகவும் இந்நிலப்பரப்பின் 'கலிபா'வாக (மன்னர்) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்ர் அல் பக்தாதி விளங்குவார் என்றும் அறிவித்துள்ளனர்.
இளம்பெண்கள், விதவைகள்...
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள திருமணமாகாத 'ஜிஹாத்' போராளிகளுக்கு வரன் தேடும் அலுவலகத்தை அந்த இயக்கம் இன்று திறந்துள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள அல் பாப் என்ற பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் இளம் பெண்கள் மற்றும் விதவைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
சம்பிரதாய முறைப்படி...
சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கே சென்று, முறைப்படி பெண் கேட்டு, இஸ்லாமிய சம்பிரதாயப்படி போராளிகள் மனைவியாக்கிக் கொள்வார்கள் என ஐ.எஸ்.ஐ.எஸ். தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.