அதிபர் இஸ்லாம் கரிமொவ் மரணம்… உஸ்பெஸ்கிஸ்தான் அரசு மவுனம்- துருக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமொவ் மறைந்து விட்டதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அந்நாட்டு அரசு இதுகுறித்து மவுனமாகவே உள்ளது.
உஸ்பெகிஸ்தானின் அதிபர் இஸ்லாம் கரிமொவ்வின், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அவரது மகளான லோலாவும் உறுதிபடுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அரசு "அன்புள்ள குடிமக்களுக்கு பிரதமரின் உடல் நிலை 24 மணி நேரமாக ஆபத்தான கட்டத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம்" என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், வெள்ளியன்று துருக்கியின் பிரதமர் பினாலி இல்டிரிம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உஸ்பெகிஸ்தான் அதிபர் இறந்து விட்டதாகவும், உஸ்பெகிஸ்தான் மக்களுடன் தனது கவலையை பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவார காலமாகவே அதிபர் கரிமொவ் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியிருந்த நிலையில், துருக்கி பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்நாட்டு அரசு இன்னும் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கரிமொவ்வின் மரணத்தை உறுதி செய்துள்ளது. மேலும், ஆளும் கரிமொவ் ஆட்சிக்கு எதிரான இணைய தளங்கள் கரிமொவ் இறந்துவிட்டதாகவும் இறுதி சடங்குகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.
ஊடகங்கள் தெரிவித்ததற்கு ஏற்ப சமர்காண்ட் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
சோவியத் யூனியனில் உஸ்பெகிஸ்தான் இருந்த போது அதிபராக பதவி ஏற்ற இஸ்லாம் கரிமொவ் 27 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டு வருகிறார். அவருக்கு அடுத்து யார் பொறுப்பேற்பார்கள் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.