7 பேரை பலி கொண்ட லண்டன் தாக்குதல்... ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு
லண்டன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பெய்ரூட்: லண்டன் நகரில் நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
லண்டன் நகரில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் இங்கிலாந்து நாடு பதற்றத்தில் உள்ளது. உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
லண்டன் தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். லண்டன் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர்.
லண்டன் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடுகிற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லண்டனின் நடத்தப்பட்டது தீவிரவாத தாக்குதல்தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதசாரிகளை குறிவைத்தனர்
லண்டனில் பாலம் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று தாறுமாறாக பலமுறை மோதியது. இதில் பாதசாரிகள் பலரும் தூக்கியடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கத்தியால் குத்திய தீவிரவாதிகள்
அதனைத் தொடர்ந்து பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் பகுதிகளில் வேனில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் லண்டன்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
அத்துடன் இத்தாக்குதலை நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதியன்று வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைப் போல மீண்டும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் கண்டனம்
இங்கிலாந்தில் நடத்தப்பட்டுள்ள தீவிரவாத சம்பவங்கள் கண்டித்தக்கவை; நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று பிரிட்டன் மக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்துடன் தம்மைப் போல பயணத் தடையை பின்பற்றவும் இங்கிலாந்துக்கு அறிவுரை கூறியிருந்தார்.
கனடா பிரதமர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ " இன்று இரவு லண்டனிலிருந்து மோசமான செய்தி வந்துள்ளது. நிலைமையை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ர்ன்புல் ''லண்டனில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள பிரிட்டன் மக்களுக்கு எங்களுடைய பிரார்த்தனைகளும், உறுதியான ஒற்றுமையும் இன்றும் எப்போதும் இருக்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கண்டனம்
லண்டனில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. அத்துடன் தீவிரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும் மோடி தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். பொறுப்பேற்பு
இந்நிலையில் லண்டன் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. இது தொடர்பான செய்தி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.