2 சீன, நார்வே பிணைக் கைதிகளை படுகொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்
பெய்ரூட்: சீனா மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த இரண்டு பிணைக் கைதிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். பிரான்ஸ் மற்றும் ரஷ்ய விமானத் தாக்குதல் சிரியாவில் உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய, பிரான்ஸ் நாடுகளின் லேட்டஸ்ட் தாக்குதலில் 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், இரண்டு பிணைக் கைதிகள் கொல்லப்பட்ட தகவலை ஐஎஸ் வெளியிட்டது.
ஐஎஸ் அமைப்பின் டபிக் என்ற ஆங்கில பத்திரிகையில் அந்த இரு பிணையாளிகளின் உடல்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிராபிக்ஸ் முறையில் இதை வெளியிட்டுள்ளனர். அவர்கள் சீனாவைச் சேர்ந்த பான் ஜிங்குயி மற்றும் நார்வேயின் ஓலே ஜோஹன் கிரிம்ஸ்கார்ட் ஆப்ஸ்டாட் என்று தெரிய வருகிறது.
இருப்பினும் இவர்கள் எப்போது, எங்கு வைத்து யாரால் கொல்லப்பட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அவர்களது தலையை துப்பாக்கிக் குணடுகளால் துளைத்தெடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாரீஸ் நகரில் 129 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் வெறித்தனமாக கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பிணையாளிகள் படுகொலைச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படுகொலை செய்தியின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதித்து வருவதாக நார்வே பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், சீன அரசு இந்த செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளது.