ஈராக்கில் மேலும் பல நகரங்களை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்
மொசூல்: ஈராக்கின் வடக்குப் பகுதியில் குர்திஷ் மாகாண எல்லையில் உள்ள மேலும் சில நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் (இஸ்லாமிய தேசம்) கைப்பற்றியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இணைத்து இஸ்லாமிய தேசமாக பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அத்துடன் இயக்கத்தின் பெயரையும் இஸ்லாமிய தேசம் என்று மாற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்த இஸ்லாமிய தேசத்தின் போராளிகள் நேற்று இரவு தல்கிப், குராகோஷ் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் மொசூலை ஒட்டிய சில நகரங்கள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
பின்னர் இந்த நகரங்கள் இஸ்லாமிய தேசத்தின் கீழ் வந்துவிட்டதாக ஒலிபெருக்கிகள் மூலம் அவர்கள் பிரகடனம் செய்திருகின்றனர். தற்போது இஸ்லாமிய தேச போராளிகள் வசமாகியுள்ள நகரங்கள் அனைத்தும் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினராக வசிப்பவை.
இதனால் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் அகதிகளாக நகரங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்லாமிய தேச போராளிகள் முன்னகர்வை குர்திஷ் சுயாட்சி அரச படைகள் எதிர்த்து உக்கிரமாக தாக்குதல் நடத்தின.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெப் கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் சிறுபான்மை குழுவைச் சேர்ந்த மக்கள் மலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் உணவும் குடிக்க நீருமின்றி தத்தளித்து வருகின்றனர். அவர்களில் 40 குழந்தைகள் பலியாகி விட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
8 இஸ்லாமிய தேச போராளிகள் பலி
இதனிடையே ஈராக்கின் வடபகுதியில் ஈராக் வான்படை திடீர் என வான்வழித் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் இஸ்லாமிய தேசம் போராளிகளின் முகாம் ஒன்றின் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் 8 போராளிகள் பலியாகி இருக்கக் கூடும் என்று ஈராக் அரசு தெரிவித்துள்ளது.