நாங்கள் வருகிறோம்... எச்சரிக்கை: யு.எஸ். ராணுவ ட்விட்டர் கணக்கை முடக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பல்!
புளோரிடா: அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் ட்விட்டர் மற்றும் யூடியூப் கணக்குகளை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் முடக்கினர்.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பாவில் அமைந்துள்ளது. இந்த பிரிவு ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போரை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் மத்திய கட்டளைப் பிரிவின் ட்விட்டர் மற்றும் யூடியூப் கணக்குகளை முடக்கினர். இதை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்தது.
ஹேக்கர்கள் அமெரிக்க ராணுவ ட்விட்டர் கணக்கில் சைபர் கலிபாத் (கலிபாத் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைத்துள்ள இஸ்லாமிய நாட்டைக் குறிக்கும்) என்றும், ஐ லவ் யூ ஐ.எஸ்.ஐ.எஸ். என்றும் எழுதியிருந்தனர். மேலும் அமெரிக்க ராணுவ வீரர்களே, நாங்கள் வருகிறோம், எச்சரிக்கையாக இருங்கள் என்றும் ஹேக்கர் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். சைபர் கலிபாத் வந்துவிட்டது. உங்களின் கம்ப்யூட்டர்கள் மற்றும் அனைத்து ராணுவ தளத்துக்கும் வந்துவிட்டது என்று மேலும் தெரிவித்திருந்தனர். ஹேக்கர்கள் ட்விட்டர் கணக்கில் கருப்பு, வெள்ளை துணியால் முகத்தை ஒருவர் மூடிக் கொண்டு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.
அல்லாஹ்வின் பெயரால் சைபர் கலிபாத் ஜிஹாதை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மத்திய கட்டளைப் பிரிவின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் வேலை செய்யாமல் இருந்தது. அதன் பிறகு ட்விட்டர் கணக்கு மீண்டும் ராணுவத்தின் கட்டுபாட்டில் வந்துவிட்டது.
சைபர் பாதுகாப்பு பற்றி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உரை நிகழ்த்திய கையோடு ராணுவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.