இஸ்ரேல்- அரபு எமிரேட்ஸ் ஒப்பந்தம் பச்சை துரோகம்... பாலஸ்தீனம் ஆவேசம்- தூதர் நாடு திரும்ப உத்தரவு
ரமல்லா: அமெரிக்காவின் முன்முயற்சியில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு எமிரேடெஸ் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தம் பச்சை துரோகம் என்று பாலஸ்தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தமது நாட்டு தூதரை உடனே நாடு திரும்பவும் பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுடன் அரபுநாடுகள் ராஜாங்க ரீதியாக தொடர்புகளை வைத்து கொள்வதில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் கையும் ஓங்கி வருகிறது. இதனை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ராஜங்க ரீதியான உறவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்பாடு செய்தது. இதனை மூன்று நாடுகளும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தன.
இந்த ஒப்பந்தத்தின்கீழ் பாலஸ்தீன பகுதிகளை தங்களது நாட்டுடன் இஸ்ரேல் இணைத்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல்- அரபு எமிரேட்ஸின் ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் நிராகரித்திருக்கிறது. மேலும் இது முதுகில் குத்தும் பச்சை துரோக செயல் எனவும் சாடியுள்ளது.
அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தமது நாட்டு தூதரை உடனே நாடு திரும்பவும் பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது.