50 நாள் யுத்தம் நிறைவு! ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நீண்ட கால போர் நிறுத்தம்!!
காஸா: எகிப்து கோரிய நீண்ட கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இதனை ஐ.நா வரவேற்றுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியியில், இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்குமான போர் 50 நாட்களாக நீடித்தது. இதில் 2,140 பாலஸ்தீனர்கள் பலியாகினர். 11,100 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் தரப்பில் 64 ராணுவத்தினர், 5 பொதுமக்கள் என 69 பேர் பலியானார்கள்.
எகிப்து அரசு பல முறை இரு தரப்பு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபோதும், சமரசம் ஏற்படாமல் காஸாவில் பதற்றம் நீடித்து வந்தது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக் கொண்டன.
இந்த நிலையில் இரு தரப்பும் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஐ.நா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ட்யூஜாரிக் கூறும்போது, 50 நாட்களாக அங்கு ஏற்பட்ட துயரங்களுக்கு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நெடுநாட்களாக அங்கு நடந்த மனித துயரங்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் முடிவு ஏற்படும் வாய்ப்பு அமைந்துள்ளது என்றார்